அபிமன்யு


மகாபாரதம் சம்பவித்த
குருச்சேத்திரம் இன்றும்
குருதிச்சேத்திரமாய்
ஈரம் காயாமல்…..

தன்பெண்ணை மயிர்பிடித்திழுத்து
துயிலுரித்தும் அவமதித்தும்
ஒன்றும் செய்யா பாண்டவர்கள்
இன்றும் கையாலாகாமல்…..

நியாயம் இதுவென தெரிந்தும்
நீதி எதுவென புரிந்தும்
கவுரவர்கள் பக்கம் பீஷ்மர்கள்
இன்னும் செத்து தொலையாமல்…..

தந்தையின் பொருட்டு போர்க்களம் புகுந்து
விழுப்புண் பட்டு மாண்டு போக
அவதரித்த அபிமன்யுவோ…..

பூரண சந்திரனாகும் முன்னமே
மண் மூடி போகத்தான்
பிறைச்சந்திர பெயர் தாங்கினையோ….

தாயின் மாராப்பு வாசம் மறவா
தளிர் மார்பு, மரண நெடியடிக்கும்
துப்பாக்கி தாங்கியதோ…..
தோட்டாக்கள் வாங்கியதோ….

ஆதித்த கரிகாலன் வீரசொர்க்கம் எய்த
தமிழ் சொர்க்கம் படைக்க பிறந்த
பொன்னியின் செல்வனே
செந்நீரில் குளித்து கண் மூடிப்போனதென்ன?

எதிரியின் குருதி தோய்த்து
இரங்கல்பா இயற்றி உன் வீரம் போற்ற
இன்று தமிழர் எவருக்கும் துணிவில்லை
இனி தமிழின் வாழ்வு தானென்ன?

Comments