உளறுவது ஊர்மிளை....
அண்ணல் காடேக
அமைதி சீர்குலைய
அயோத்தி சாகவிட
அனைத்தும் செய்தனை
அன்னை கைகேயி....
அடுக்கும் கைம்மை நினக்கு.....
கொண்டவன் சொல்கேளாது
கொழுநன் தடைமதியாது
கொடியவன் கவரசெய்து
கொண்டுசெல்லப்பட்டனை
கொடிமலர் உடலனை சீதை....
கொடுமை வேண்டும் நின்பிழைக்கு.....
கணவன் என்று ஒருவனில்லை
கண்டவன் மேல் ஆசை கொள்ளை
கட்டியவள் முன்
கணவனை தொட்டனை,
மூக்கறுபட்டனை
அரக்க மறவன் தங்கை - வையம்
சிரிக்க மறக்குமோ நின்னை...
இணையில்லா இதிகாசத்தின்
இன்றியமையா மாதர்காள்...
செய்தனை,
செயவொனா தப்பினை...
பெற்றனை,
செய்ததன் தண்டனை...
ஒருவனை நினைத்ததும்
கணவனாய் வரித்ததும்
உயிருருக நேசித்ததுமன்றி,
பிழையென
யாது செய்தனன்
நான்?
பிரிவென்ற
மீளாத் துன்பம்
ஏன்?
Comments
தெரிவை நிலையும் தெளிவாய்த் தெரிந்ததால்
தன்தூக்கம் ஊர்மிளைக்குத் தந்து இலக்குவன்
கண்விழித்துக் காத்தனன் காடு.
- நேரிசை வெண்பா